Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, January 13, 2015

ஒட்டகச்சிவிங்கியும் கிட்டப்பார்வையும் .....

 ஒட்டகச்சிவிங்கியும் கிட்டப்பார்வையும் .....

வேலை இல்லாத வாரக்கடைசிகள் அபூர்வமாகிப்போன துறையில் நானும் இருப்பதால் , சமீபத்திய இரண்டு மாதங்கள்  மிகவும் இனிமையாகக் கழிந்தது , வேலை இல்லாததால். பிடித்த விஷயங்களை செய்வதும் , தூங்குவதும் குழந்தையுடன் இன்னும் அதிக நேரம் செலவிடுவதற்கும் நல்ல வாய்ப்பாக இருந்தது.

நாளையில் இருந்து திரும்பவும் ஓட்டம் தொடங்கப்  போகிறது என நினைத்துக்கொண்டே படுத்து இருக்கையில், மகள் எப்பொழுதும்  போல ,
"bookchi bookchi " என்று ஒரு கதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து படம் பார்த்து கதை சொல்லச் சொன்னாள் .

மேல சொன்ன தலைப்புடன்[ ஆங்கிலத்தில்;தான் , " THE  near  sighted  giraffe "] இருந்த அழகான படங்களுடன் கூடிய அந்த புத்தகத்தை நான் பல நாட்கள் பார்த்து உள்ளேன் , ஆனால் இந்த கதையினை படித்துச்  சொன்னது கிடையாது.

ஒரு காட்டில் ஒரு ஒட்டகச்சிவிங்கிக்கு கிட்டப்பார்வை  .

 காட்சிகள் சரிவர தெரியாமல் நிறைய  சங்கடங்கள். கண் தெரியாமல் ஒரு மரத்தின் கிளையில் தலை முட்டுகிறது , ஒரு குரங்கு அதனை கண்ணாடி  அணியச்  சொல்லுகிறது . மற்ற விலங்குகள் கண்ணாடி அணிந்த தன்னை பார்த்து என்ன நினைக்குமோ என்று யோசித்து  , அது கண்ணாடி அணிய மறுக்கிறது .  பிரச்சனைய சமாளிக்க , "helmet"  ஒன்றை போட்டுக்கொள்கிறது .
பிறகு ஒரு சிறுத்தையின்  மீது கால் இடறி விழுகிறது. இதன் பிறகும்  கண்ணாடி போடாமல் , வாலுக்கு மணி கட்டிக்கொள்கிறது , மற்ற மிருகங்கள் இதன் வருகை தெரிந்துகொள்ள . இப்படி போகிறது அதன் நாட்கள் .
சில வாரங்கள் கழித்துப்பார்த்தால் அதன் பின் புறத்தில் ஒரு தலைகாணி [முள்ளில் விழுந்ததில் இருந்து ], முதுகில் ஒரு ஏணி [ பள்ளத்தில் விழுந்ததில் இருந்து]  என பல சுமைகளை கூடவே தூக்கிக் கொண்டு சென்றது.

[ முழுக்கதையினை   சொல்லவில்லை இங்கே   , கொஞ்சம்  சுருக்கியுள்ளேன் , புத்தகத்தில்  ஒட்டகச்சிவிங்கி  இன்னும்  நிறைய  இடங்களில்  தடுமாறுகிறது !, சுமையும்  கூடுகிறது  ஒவ்வொரு  முறையும் ]

ஆனால்  கண்ணாடி மட்டும் அணிய மறுத்தது . இந்த வினோத தோற்றத்தினால் மற்ற மிருகங்கள்  அதனை அதிமாகவே  கேலி செய்தன, சில பாவமாக பார்த்தன .

இந்த கதை இப்படி போய்க்கொண்டு இருக்க, என் மகள் என் மடி விட்டு இறங்கி ஓடி விட்டாள் . குழந்தைகளின்  கவனம்  சிறிது நேரத்திற்கு மேல் ஒரு இடத்தில இருக்க மாட்டேன் என்கிறது."Attention  span " எனச்சொல்வர்  இதனை.

தொலைக்காட்சி  மற்றும் இன்டர்நெட் மூலமாக இவர்கள் கார்டூன்ஸ்  பார்த்து ,நொடிக்கு பல முறை காட்சிகள் மாரிப்பழகி , கதை கேட்கவோ , சற்று ஆழமாக ஒரே இடத்தில உட்கார்ந்து மனதை செலுத்தும் காரியத்தில் மனம் சேர மாட்டேன் என்கிறது. இதற்க்கு நாமும் காரணம். வேலை அல்லது சோம்பேறித்தனத்தால்  , தொலைக்காட்சி போட்டால் அழாமல்  இருக்கிறார்கள் என்று பழக்கி விட்டு , இப்படி ஆகிறது. இனி இதை மாற்ற முடிவு செய்து உள்ளேன். இதற்கு என்னுடைய அலுவலக நண்பர் முன்னோடி . வாரத்திற்கு சில மணி நேரங்கள் தான் தொலைக்காட்சி பார்க்க   விடுகிறார். முடிந்த வரை இயற்கையுடன் கூடிய சம்பாஷணைகளை பழக்கி விட்டு இருக்கிறார். சைக்கிள் எடுத்துக்கொண்டு அவர்களுடன் ஏரியினை   சுற்றி வருவதும் , படம் வரைதலும் , நிறைய புத்தகங்கள் வாசிப்பதும் , ஓடி ஆடி விளையாடவும்  பழக்கி இருக்கிறார். அடிப்படையில் அவர்களின்  படைப்பாற்றலை ["creative  intelligence  "]  பெருக்குதல் ஆகும்  .

அனைவரும் இதனைச்  செய்ய வேண்டும்.

கதையைத்தொடுருவோம் . கடைசியில் ஒரு சிறுத்தை ஒரு மரம் ஏறி அந்த ஒட்டகச்சிவிங்கியின் மீது ஒரு கண்ணாடி மாட்டி  விடுகிறது.
இப்பொழுது தன்னுடைய கோலத்தை  ஒரு நீர் நிலையில்  அது பார்க்கிறது .
இவ்வளவு  கோமாளியாகவா காட்சியளித்தோம் என்று மற்ற அனைத்தையும் கழற்றி எறிந்து , கண்ணாடி மட்டும் அணிந்த பின , தான் அழகாகவே  இருக்கிறோம் என உணர்கிறது. இப்படி அந்த கதை முடிந்தி விட்டது.

கண்ணாடி அணிந்து இருந்தால் தாழ்வு  மனப்பான்மை வரக்கூடாது  என குழந்தைகளுக்குச்  சொல்லவும் , மற்றவர்கள் அப்படி அணிந்து இருந்தால் அதை பற்றி குழந்தைகள்  என்ன நினைக்கிறார்கள்  என தெரிந்து கொள்ளவும்  பெற்றோர்களுக்கு சொல்லி முடிக்கிறார்கள் கதையின் ஆசிரியர்கள்
பெஞ்சமின்  மற்றும்  பில்  மக்லீன் .

[ NEW  BURLINGTON  , LONDON  வெளியீடு ].

எனக்கு இந்தக்கதை இன்னும் நிறைய ஆழமானவற்றைச் சொல்லியது.  இந்தக்கதையின் மூலமே அந்த ஒட்டகச்சிவிங்கி , கண்ணாடி அணிந்தால்  தன்னைப்பற்றி " மற்றவர் என்ன நினைப்பர்" அல்லது " WHAT  OTHERS    THINK " என்பதே .

நாமும் பல  சூழ்நிலைகளில்  ஒரு விஷயத்தை அணுகும் பொழுது , சரியான  கோணத்தை விட்டு ,  " மற்றவர் என்ன நினைப்பர்" என்கிற நினைப்பில் வேறு முடிவு எடுக்கிறோம் , அல்லது நமது சந்தோஷங்களை  குறைத்துக்கொள்கிறோம் . இதனால்  பாரம் தான் கூடுகிறது .
உண்மையில்  ,பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம்மை பற்றி சிந்திக்க எவர்க்கும் நேரம் இருப்பதில்லை அல்லது சரியானதைச் செய்தால் [ கண்ணாடி அணிந்துகொண்டால் !] பலர் நமக்காக
மகிழ்ச்சியே அடைவர் . மற்றவரை பாதிக்காத வகையில் எடுக்கும் எந்த முடிவும் சரியானதே என்பது என் கண்ணோட்டம் .

இன்னொரு  வகையில் பார்த்தால் , கண்  தெரியாதது என்பது  அந்த ஒட்டகச்சிவிங்கியின் குறைபாடு. அதற்க்குண்டான தீர்வை அது புறத்தில்  தேடுகிறது.நமது கண்ணோட்டம் சரியாக இருந்தால் மற்றது தானாகவே விளங்கும்.

பிள்ளைக்கு கதை சொல்லப்போய்  எனக்கும் சிலவற்றை  வலியுரித்திச்சென்றது இந்தக்கதை .

 சரியான கண்ணாடி அணிந்து வாழ்கையினை  தொடருவோம்



Saturday, January 10, 2015

கடன்சுமையும் தொழில்முனைவும்

 கடன்சுமையும்  தொழில்முனைவும் :

சென்னையில்  ஏற்பட்ட சில நிகழ்வுகளை பதிவு செய்யத்தோன்றியது .

தோள்பட்டையில் சின்ன அடி ஏற்பட்டதாலும்  ரொம்ப நாட்களுக்கு பிறகு சென்னை வந்ததாலும் , சிறிது  நாட்கள் " call  driver "  சேவையினை  உபயோகப்படுத்திக்கொண்டேன்   .  இது நல்லதொரு சேவை.

அம்மாவிற்கு அடிக்கடி  வெளியே செல்லும் வேலை இல்லை.வாரத்திற்கு அல்லது  இரண்டு  வாரத்திற்கு ஒரு முறை தான் கோவிலுக்கு போக காரை எடுககும்  சூழ்நிலை  வரும். மாசத்திற்கு டிரைவர் வைத்துக்கொள்ளும்  தேவையும் இல்லை , செலவும் அதிகம். நான்கு மணி நேரத்திற்கு 250-300 ரூபாய் பெற்றுக்கொண்டு "call  driver " வசதி மிகவும்  சவுகரியம். தற்போது உள்ள ஆட்டோ செலவிற்கு ரொம்பவே  தேவலாம்.

இப்படி சில டிரைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அனுப்பின  ஒருவரையே திருப்பி  பெரும்பாலும்  அனுப்ப மாட்டார்கள் [ நாம் அவரை நிரந்தரமாக  நம்ம வீட்டிற்க்கு சேர்த்துக்கொள்வோம் என்று!]. 
தினேஷ்   மட்டும்  இரண்டு முறை வந்தார்.சிரித்த  முகத்துடன்  எப்பொழும் கனிவான   தோரணையும்  உள்ள அவருடன் பழகுவதற்கு  ரொம்ப நேரம்  ஆகவில்லை .

"என்னிடமும்  வண்டி இருக்கிறது சார் ."tavera " வச்சு இருக்கேன். ஆனா சவாரி இல்லாத போது  இப்படியும்  ஓட்டறேன்  " என்றார்.

எப்பொழுதும் அலை பேசியினை  நோண்டிக்கொண்டே  இருந்தார் , வண்டி ஒட்டாத சமயத்தில்  தான். வெளியே சிரித்த முகத்துடன்  இருந்தாலும்  , ஏதோ உள்ளே ஓடிக்கொண்டு  இருப்பதை  உணர முடிந்தது , சிறிய படபடப்பை  அவரை  அறியாமல் வெளிக்காட்டிக்கொண்டு  இருந்தது அவரது உடல் மொழி. 

"வண்டி வச்சுட்டு  இந்த மாதிரி , இன்னொருத்தருக்கு வண்டி ஓட்ட கஷ்டமா  இருக்கா? ஏன்  டென்சனா  இருக்கீங்க ?" 

" இல்லை சார் , இதுதான் சார் வசதி  , நினைச்சா  ஓட்டுவேன்  , இல்லேன்னா  வீட்டுக்கு பொய் ரெஸ்ட்  எடுத்துப்பேன். புல் டைம் ஓட்டினா  , நேரம் காலம்  இல்லாம வேலை செய்ய வேண்டி இருக்கும். ராத்திரி பத்து  ஆய்டும் பெரும்பாலும் . நான்  இப்போ அதுவும் செய்யறது  இல்லை , வண்டி இருக்கிறதால  லாங் ட்ரிப் மட்டும் தான் போறது , இல்லை ஏர்போர்ட்  pickup  அண்ட் drop  மட்டும்  சிட்டிக்குள்"

அது இல்லை  சார் பிரெச்சனை ." tavera " வண்டி ஒன்னு லோன்  போட்டு  வாங்கினேன் . மாசா  மாசம் 15000 " due " கட்ட வேண்டி இருக்கு. அவ்ளோவா ஓட்டம்  இல்லை. எங்க " travels"  நம்பித்தான்  வாங்கினேன்.ஆனா அவர் செகண்ட் ஹண்ட்  வண்டிய  டிராவல்சில் ஓட்ட விட  முடியாதுன்னு  சொல்லிடாரு . 
அவர் மேலயும  தப்பு சொல்ல முடியாது. "செகண்ட் ஹாண்ட் "  வண்டி  எப்போ மக்கர்  பண்ணும்னு தெரியாது. வெளியூருக்குத்தான்  இந்த வண்டிய  புக்  செய்வாங்க . அவசர பட்டு வாங்கிட்டேன். எனக்கு அவர் அளவுக்கு  காண்டாக்ட்ஸ்  இல்லை. அதான்  வண்டிய  விக்கப்பார்த்துட்டு  இருக்கேன்.சரியாய் பார்ட்டி  எதுவும் அமையலை. ஆறுக்கு  வாங்கினேன்.
1.5 லட்சம்  நஷ்டத்துல்ல  தான் கேக்கறாங்க . விக்கவும்  மனசு இல்லை , ஆசையா  வாங்கினது, ஆனா "due " கட்டவும்   கஷ்டமாவும்  இருக்கு"

" டீ  சாப்பிடலாம்  வாங்க"..தயங்கிய  வாறே  வந்தார்.


"நீங்க சொல்றதை  நானும்  யோசிச்சு  பார்த்தேன்.  இன்னும்  நஷ்டம் அடைய  வேண்டாம்னா நீங்க சரியான ஆளைப் பார்த்து  வித்துடறதுதான் சரி. கஷ்டமாத்தான்  இருக்கும் . ஆனா நாள் ஆகா ஆக  ரீசேல் விலை  கம்மி ஆகத்தான்  செய்யும் . காருக்கு  எதன்னா  ரிப்பைர் வந்துச்சுன்னா  ரொம்ப  கஷ்டம்  ஆகிடும்."

" நீங்க சொல்றது சரி தான.நானும் அதை நினைச்சுதான்  குழப்பத்துல  இருந்தேன்."

" ப்ரோகர்ஸ் இல்லாம  விக்கறதுக்கு வழி இருக்கு. "சுலேகா " , " கார்வாலே " போன்ற "websites"  இருக்கு. வீட்டுக்கு  வாங்க , நாம விளம்பரம்  கொடுப்போம்.
வண்டிய கழுவி எடுத்துட்டு வாங்க.போட்டோவும்  போடுவோம். அப்புறமா  பார்ப்போம் ரெஸ்பான்ஸ்  எப்படி வருதுன்னு "

"சரிங்க சார் ".

பிறகு ஒரு வாரமா  எந்த தகவலும் இல்லை.
அடுத்த முறை பார்த்த பொழுது  ,

" காரை வித்துட்டேன்  சார். நஷ்டம்  தான் . கும்பகோணத்துல  இருந்து ஒரு பார்ட்டி  புரோக்கர்  மூலமா  வந்து  வாங்கிட்டு போனான் ".

ஒரு முறை  நாமே பார்த்து  இருக்கலாமேன்னு   கேக்கத்தோன்றியதை   அடக்கிகொண்டேன் .

" சரி , இனி மேல  புதுசா  தொடங்குங்க . புடிச்சுடலாம் .நானும்  காலேஜ்  முடிச்சு ரெண்டு வருஷம் வேலை பார்த்துட்டு திரும்ப படிக்கப்போனேன். அப்பாவும் "retire " ஆகி இருந்தார். பெரிய முடிவுதான் . நான்கு வருடம்  கழிச்சு அதே பழைய BE  சம்பளதுக்குதான் வேலை சேர்ந்தேன் . அப்பாவுக்கு தான் வருத்தம் , இவ்ளோ கஷ்ட  பட்டு படிச்சு  சரியான சம்பளம்  இல்லைன்னு.
சில வருஷம் ஆச்சு பிடிக்க . கடன்  வேறு  படிப்பிற்கு  வாங்கியது
அப்பா ஏற்கனவே நிறைய செலவு செய்து  விட்டார் ,கடன் தவிர  , அதனால
அவர் சொன்னதையும்  கேட்காமல் நான் தான்  படிப்புக்கடனை அடைப்பேன்னு  சொல்லிட்டேன். கடன் அடையும் வரை  அந்த 5 வருடங்கள் ,பெரிதாக  அதை விட்டு  நம்மால் வெளியே எதுவும் யோசிக்க  முடியாது.
உங்க நிலைமை புரிஞ்சுதான் பேசறேன் .ஆனா இப்போ  ஒரு அளவுக்கு நல்ல இருக்கேன் . உங்க வீட்டுல என்ன சொன்னாங்க ?"

" அவ ஒன்னும்  சொல்ல மாட்டா  சார் . எனக்குதான்  கார் மேல  ஒரு அட்டாச்மெண்ட்  வந்துடுச்சு ".

"கஷ்டம்தான். சரி ஆகிடும். பெரிய சுமை ஒன்னை இறக்கி வச்சு இருக்கீங்க .
கடன் இல்லாமல் குடும்பத்தை  நடத்துங்க" .

" சரி சார்" என்று பொய் விட்டார்.

என்னை இந்த நிகழ்ச்சி  சிந்திக்க வைத்தது.
"contacts " என்பது  எவ்வளவு  முக்கியம். திறமையும்  , உழைப்பும்  இருப்பினும்
சரியான ஆட்கள்  தெரிய வில்லை என்றால்  கடினம் தான்.இது பெரிய கண்டுபிடிப்பு இல்லை என்றாலும்  , கண் முன்னே  பார்த்ததும் , தாக்கம் அதிகமாக  இருந்தது.

குமார் மேலயும் தவறு  இருந்ததை அவரே ஒப்புக்கொண்டார் .சரியாக  தகவல் பரிமாற்றம்  [ " communicate "  ]செய்ய  வில்லை  அவருடைய "travel  agency " யுடன். புதிய கார்  ஒன்றை [ swift  அல்லது 6 லட்சம்  விலைக்கு  கம்மியான கார் ] வாங்கி இருந்தால், "travel  agency " மூலமாகவே ஓட்டம்  இருந்து இருக்கும் .

entrepreneur " ஆவதற்கு  முன்பு  துறை  சார்ந்த வணிகம்  பற்றி  ஆய்வும் [ "market  analysis " ],தொலை  நோக்கு  பார்வையும்   எவ்வளவு  அவசியம்  என்பதை நினைவுப்படுத்தியது  .இது எல்லா  துறைக்கும்  பொருந்தும் .
லாப நஷ்டங்களையும், போட்டியாளர்களையும் , தற்போதைய தேவைகள் ,
வங்கியில் சேமிப்பு  இப்படி  பல  காரணிகளை பார்க்க வேண்டி உள்ளது .
தீவிரமாக  ஆராய்ந்த பின்னே தான் இறங்க வேண்டும்.. திட்டமிடும்  கட்டம்தான்  ரொம்ப முக்கியமாகிறது .

 " இன்டர்நெட் " மார்க்கெட்டிங்கின்  உதவி இருந்தால்  அவர் தன்னுடைய  காரை  இடைத்தரகர்  இன்றி  நல்ல விலைக்கும்  வித்தும்  இருக்க முடியும் .படிப்பறிவு சரியாக  இல்லை என்பதையும்  , சூழ்நிலை  மற்றும் பயத்தையும்  பயன்படுத்தி  இது போன்ற இடைத்தரகர்கள்  லாபம்  பார்க்கின்றனர் .

கடின  உழைப்பும்  அனுபவ  அறிவும் காலம்  கடந்தாலும் வெற்றி தந்தே  ஆக வேண்டும்.அவர் கற்ற பாடம் , இனி கவனமாக  இருக்கச்செய்யும் .
  ஒரு நாள்  " innova " காரில்  அவரைப்பார்க்க மனம் ஏங்கியது .

பின் சீட்டில்!